சொந்த மக்களுக்காக வாகா எல்லை மீண்டும் திறந்த பாகிஸ்தான்!

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்வதற்கு ஏற்ப வாகா எல்லையை அந்நாடு மீண்டும் திறந்துள்ளது.

இந்தியாவின் அட்டாரி கிராமத்துக்கும் பாகிஸ்தானின் வாகா கிராமத்துக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளன. இதன் வழியாக மக்கள் சாலை மார்க்கமாக எல்லையை கடக்க முடியும்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம்  திகதி  காஸ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவு பிறப்பித்தது.

பாகிஸ்தானும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி விமான போக்குவரத்து இல்லாததால், பலரும் வேறு நாடுகள் வழியாக தங்கள் தாய் நாட்டுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் வாகா எல்லை நேற்று (வியாழக்கிழமை) மூடப்பட்டது. இதனால், பாகிஸ்தானியர்கள் பலர் இந்தியாவைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு பாகிஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை) அனுமதி அளித்துள்ளது.