சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா

2021 மார்ச் மாதம் 25ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய தனது முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் மக்களாட்சி நாடுகள் தனியொருவராட்சி நாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். தனியொருவராட்சியின் கீழ் உள்ள நாடுகள் உலகின் முன்னணி நாடுகளாக, செல்வந்தமிக்க நாடுகளாக, வலிமை மிக்க நாடுகளாக உருவெடுக்க முயல்கின்றன. நான் பதவியில் இருக்கும்வரை அதை நடக்க அனுமதிக்கமாட்டேன் என்று சூழுரைத்தார் பைடன். சீனாவின் பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி, படைவலிமைப் பெருக்கம் ஆகியவை அடக்கப்பட வேண்டும்என அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். கோவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் அமெரிக்காவினதும் சீனாவினதும் பிரதிநிதிகள் அமெரிகாவின் வடதுருவ மாகாணமான அலஸ்க்காவில் 2021 மார்ச் மாதம் 19ஆம், 20ஆம் திகதிகளில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் போரை தணிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடிக் கொண்டனர்.

வர்த்தகப் போர்

சீனா அமெரிக்காவிற்கு அதிக அளவு ஏற்றுமதியை செய்து அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புக்களை பறிப்பதால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் பலவற்றிற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்தது. அதற்கு போட்டியாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது தனது வரியை அதிகரித்தது. இப்படி இரண்டு நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இறக்குமதிகளை அதிகரிப்பதை வர்த்தகப் போர் என்பர். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் போது சீனாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும், உலக ஆதிக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என முடிவு செய்யப்பட்டது. டிரம்பின் தேசியப் பாதுகாப்பு கேந்திரோபாய அறிக்கையில் சீனா அமெரிக்கா கட்டியெழுப்பிய அமெரிக்காவை சுற்றிய உலக ஒழுங்கை இல்லாமற் செய்து தனக்கு சாதகமான ஓர் உலக ஒழுங்கை கட்டி எழுப்ப முயல்கின்றது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொழில்நுட்பப் போர்

industryweek 28143 11 semiconductors and other electronic components 0 சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா

தொழில்நுட்பத்தின் இருதயமாக இருப்பவை குறைகடத்திகளாகும் (Semicondutors) இவற்றை Chips எனவும் அழைப்பர் குறை கடத்தி உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை அமெரிக்காவும் தைவானுமாகும். சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தடை போட அமெரிக்காவும் தைவானும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் குறைகடத்திகள் மீது கட்டுப்பாடு விதித்துள்ளன. அத்துடன் இத் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள இடைவெளியை அமெரிக்காவிற்கு சாதகமாக அதிகரிப்பதற்கு குறைகடத்தி உற்பத்தித் துறையின் மேம்பாட்டிற்கு அமெரிக்கா 3.4பில்லியன் நிதியை ஒதுக்கியது. ஏற்கனவே சீனா இத்துறையில் அமெரிக்காவிலும் பார்க்க பத்து ஆண்டுகள் பிந்தங்கியுள்ளது.

சீனாவின் படைத்துறையை அடக்குவது

1605662730128009 சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா

முதலில் சீனப் படைத்துறை உலகிலேயே அதிக அளவு எண்ணிக்கையுள்ள படையினரைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. பின்னர் சீனா அமெரிக்காவின் பாரிய கடற்படையை எதிர் கொள்ள நீர்மூழ்கிக் கப்பல்களில் அதிக கவனம் செலுத்தி அதிக எண்ணிக்கையான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட நாடாக உருவானது. பின்னர் உலகிலேயே எண்ணிக்கை அடிப்படையில் அதிக கடற்கலன்களை கொண்ட கடற்படை மேம்படுத்தப்பட்டது. இருந்தும் அமெரிக்கா தனது கடற்படை வலிமையை தொழில்நுட்ப அடிப்படையில் மேம்படுத்திக் கொண்டே போகின்றது. அமெரிக்காவிடம் பத்து விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் ஐந்தாம் தலை முறைப் போர்விமானங்களும் உள்ளன. சீனாவின் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களும் தாக்கு திறன் அடிப்படையில் மிகவும் பிந்தங்கியவையே. ஒரு விமானம் தாங்கிக் கப்பலை பாதுகாக்கக்கூடிய நாசகாரிக் கப்பல்கள் சீனாவிடம் இல்லை. இதனால் சீனா தனது ஏவுகணை உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி ஒலியிலும் பார்க்க இருபது மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கியது. இவற்றை அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடை மறித்து அழிக்க முடியாது என்ற நிலை உருவானது. இதனால் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் செல்லாகாசாகி விட்டன என்று படைத் துறை ஆய்வாளரகள் சிலர் கருத்து வெளியிட்டனர். சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இலகுவாகவும் மலிவாகவும் இடைமறித்து அழிக்கும் லேசர் படைக்கலன்களை அமெரிக்கா உருவாக்கி விட்டது.

pic சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா

சீனாவா அமெரிக்காவா வலிமையானது?

படைத்துறையில் சீனாவா அமெரிக்காவா வலிமையானது என்ற கேள்விக்கு தைவானின் நிலைதான் பதிலாக அமையும். சீனா எப்போது தைவானை தன்னுடன் இணைக்கின்றதோ அன்று சீனா அமெரிக்காவை மிஞ்சி விட்டது என்று சொல்லலாம். தைவானைக் கைப்பற்றுவது இரண்டு வகையில் சீனாவிற்கு நன்மையளிக்கும். ஒன்று தைவானின் தொழில்நுட்ப வளர்ச்சியை சீனா பெறலாம். இரண்டாவது பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன் கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும். பசுபிக் பிராந்தியத்தில் சீனா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய நாடாக மாறும். சீனா அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை இணைய வெளியூடாக ஊடுருவி திருடி தனது போர்விமானங்களை உற்பத்தி செய்கின்றது என அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சீனா பல விமானங்களை உற்பத்தி செய்தாலும் விமான இயந்திர உற்பத்தியில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இயந்திர உற்பத்தி தொழில்நுட்பத்தை பிரதி பண்ணுவது (காப்பியடிப்பது) மிகவும் கடினமானது. அதனால் சீன விமானப்படை அமெரிக்க வான்படையிலும் பார்க்க வலிமை குறைந்ததே. சீனாவைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் அமெரிக்க சீனப் போர் நடந்தால் முதலில் இரு நாடுகளும் பெரும் இழப்புக்களைச் சந்திக்கும். அதில் அமெரிக்க இழப்பு அதிகமாக இருக்கும். ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமெரிக்கப் படையினர் சீனாவை நோக்கி நகர்த்தப்படும் போது சீனா பாரிய இழப்பைச் சந்திக்கும்.  அமெரிக்கா தோற்கடிக்கப்படுவது தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதால் ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா இந்தியா, வியட்னாம் போன்ற நாடுகள் சீனாவிற்கு எதிராக போர் புரியும். அப்போது சீனா தோற்கடிக்கப்படும். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த நிலை இருக்கும். அதேவேளை அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவிற்கு எதிரான ஒரு படைத்துறைக் கூட்டமைப்பு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, வியட்னாம், அவுஸ்திரேலியா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளைக் கொண்டு உருவாகும். அப்போது சீனா அடங்கிப் போக வேண்டிய நிலை ஏற்படும்.

சீனா ஒடுங்கியும் போகலாம்

41fp120313a763 60297697 சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா

சீனா கடைப்பிடித்த ஒரு குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்ற கொள்கை அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை இப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. சீனாவின் மக்கள் தொகையில் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டும் இளையோரின் தொகை குறைந்து கொண்டும் செல்கின்றது. இது பாரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது. அது மட்டுமல்ல படைத்துறையிலும் ஆளணிப் பற்றாக் குறை ஏற்படலாம். இதனால் சீனா தானாகவே ஒடுங்கலாம்.