சிரியாவில் அரசுப் படைகள், ரஷ்யப் படைகள் போர்க்குற்றம் புரிந்துள்ளன ஐ.நா. அறிக்கை

சிரியாவில் சிரிய அதிபர் ஆசாத்திற்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு அண்டுகளாக நடைபெற்று வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதிபர் ஆசாத்திற்கு ரஷ்யப் படை ஆதரவளித்து வருகின்றது. ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. அத்துடன் கிளர்ச்சியார்களின் பிடியில் உள்ள சில  இடங்களில் அவ்வப்போது சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் சிரிய மற்றும் ரஷ்யப் படைகள் போர்க் குற்றம் புரிந்துள்ளன என்று ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியுடன் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்திற்கு முன்னர் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அரசுப் படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் நூற்றுக் கணக்கான மக்கள் பலியாயினர். ஆயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொது விசாரணையை நடத்தியது. அந்த விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இட்லிப் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகளில் சிரிய அரசுப் படைகள், ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி போர்க் குற்றங்கள் புரிந்துள்ளன. சிரிய அரசிற்கு ஆதரவான படைகள் போர் விதிகளை மீறியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும் கிளர்ச்சியாளர்களும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் சிரியாவில் ரஷ்யப் படையினர் நடத்திய தாக்குதலில் 500 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.