கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில், இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.

சீன நகரமான ஜிங்ஜோவில் 21 வயதான கெம் சென்யு என்பவர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனை சேர்ந்த இவர், சீனாவை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே இருந்து இதனை எதிர்கொண்டுள்ளார்.

“என்ன ஆனாலும் பரவாயில்லை. நான் இதனை ஆப்பிரிக்காவிற்கு சென்று பரப்பிவிடக்கூடாது என்று நினைத்தேன்” என்று தன் பல்கலைக்கழக விடுதியில் இருக்கும் அவர் கூறுகிறார். அவர் மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.

முன்னதாக காய்ச்சல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

“முதன்முறையாக நான் மருத்துவமனைக்கு செல்லும்போது இறந்துவிடுவேன் என்று நினைத்தே சென்றேன்” என்கிறார் அவர்.111248982 f0cd56be c59b 4779 8a8f f4aa17ddb316 1 கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

உள்ளூர் சீன மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கெம், 13 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். எச்ஐவி பாதிப்புக்கு கொடுக்கப்படும் நுண்ணுயிர் கொள்ளி மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் கெம்மின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட முதல் ஆப்பிரிக்கர் இவர்தான். இவருடைய மருத்துவ செலவுகளை சீன அரசு ஏற்றுக் கொண்டது.

“நான் என் படிப்பை முடிக்காமல் நாடு திரும்ப விரும்பவில்லை. கொரோனா தொற்று அச்சத்தால் யாரும் நாடு திரும்ப வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அனைத்து மருத்துவ செலவுகளையும் சீன அரசே ஏற்கிறது” என்று கெம் கூறுகிறார்

‘வைரஸ் இருந்தும் தனிமையில் இருந்தும் மீண்டு வந்தேன்’

சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களில் ஜூலியும் ஒருவர்.

இந்த வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் அதிலிருந்து மீண்டு வந்த கதையை பகிர்ந்து கொண்டார்.

“கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியன்று எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. நான் அதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். உடல்நிலை சரியான மாதிரி இருந்தது. ஆனால், நாள் முழுவதும் சோர்வாகவே உணர்ந்தேன். தூங்கிக் கொண்டே இருந்தேன். காய்ச்சல் போன பிறகு, ஒருவாரம் நன்றாக இருந்தேன். இருமல், தும்பல் ஏதுமில்லை.

எனினும் பிப்ரவரி 7ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நான் எழுந்தபோது, நான் இருந்த அறையே சுற்றியதுபோல இருந்தது” என்கிறார் ஜூலி.

அடுத்தநாள் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து அவர் தனிமையில் வைக்கப்பட்டார்.

அந்த அனுபவத்தையும் ஜூலி கூறுகிறார்.

சுற்றி நான்கு சுவர்கள் மட்டுமே இருக்கும். ஒரே ஒரு கதவு. ஒரு சிறு இடத்தில் நுழைவு மாதிரி இருக்கும். அதன் வழியே எனக்கு உணவு கொடுக்கப்படும். அதோடு என் மருந்து மாத்திரைகள், மாற்றுத்துணி எல்லாம் எனக்கு வழங்கப்பட்டது. என்னிடம் அலைப்பேசி இருந்தது. நீங்கள் யாருடனாவது அதில் பேசலாம். வீடியோ கால் செய்யலாம். ஆனால் நிஜத்தில் எந்த மனிதரிடத்திலும் பேசாமல் இருப்பது கடினமாக இருந்தது. சுவற்றில் தட்டி சத்தம் எழுப்பி என் பக்கத்து அறையில் இருக்கும் நபரிடம் பேச வேண்டும் போல இருந்தது.

நான் தீவிர நிலையை எட்டியபோது, மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டேன். சாதாரண நாட்களில் நாம் மூச்சுவிடுவது குறித்து எதையும் கவனித்திருக்க மாட்டோம். என் படுக்கையில் இருந்து, கழிவறை செல்லக்கூட முடியாமல் இருந்தேன். அவ்வளவு தூரம் கூட என்னால் நடக்க முடியவில்லை.”

ஒன்பது நாட்கள் கழித்து குணமடைந்த ஜூலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

கொரோனா வைரஸ் – உயிரிழப்பு விகிதம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 1000 பேரில் 5 முதல் 40 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.

1000 பேரில் 9 பேர் இறக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 3.4 சதவீதம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்பதால் இறப்பு வீதம் குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

எனினும், கொரோனா பாதிக்கப்பட்ட 30 வயதுக்கு கீழ் உடையவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. 30 வயதுக்கு கீழ் உடைய 4,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

பெண்களைவிட ஆண்களே இந்த தொற்றால் அதிகம் உயிரிழந்துள்ளார்கள்.

நன்றி – பிபிசி தமிழ்