“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரின்போது, இலங்கைக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் விரிவாகப் பதிலளிப்பதற்குத் தயார் என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான 30/1 தீர்மானம் குறித்த அரசின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதில் இலங்கை தூதுக்குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்குவார்.
இந்த அமர்வு ஒரு மெய்நிகர் உச்சி மாநாடாக இருக்கக்கூடும். எனவே, சரியான நேரத்தில் போதுமான பிரதிநிதித்துவம் செய்யப்படும்” – என்றார்.