ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிற்கு செல்வது தொடர்பாக அபிப்பிராயங்களை அறிய ஈழத் தமிழர்கள் முகாமிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்”, “இலங்கை அகதிகள் 90 சதவிகிதம் பேர் இலங்கைக்குத் திரும்பிச் செல்லத்தான் விரும்புகிறார்கள்”, “இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதுதான் சரியான தீர்வு” போன்ற குரல்கள் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் முக்கியமாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பெரும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்ற அதேவேளை, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல விரும்புகின்றார்கள். அவர்களுக்கு குடிரிமை வழங்கவதை நான் வரவேற்கின்றேன். இருந்தாலும் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
ஈழத் தமிழர்களின் விருப்பங்களை அறிவதற்காக விகடன் பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலார்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தனர். கிட்டத்தட்ட அந்தப் பணி முடிவடையும் நிலையில் உள்ளதாக அறியமுடிகின்றது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமாரி மாவட்டதைச் சேர்ந்த ஊடகவியலாளர் சிந்து என்பவரும் புகைப்பட நிபுணரான ராம்குமார் என்பவரும் கன்னியாகுமாரியிலுள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாமிற்கு சென்றிருந்தார்.
இதை அறிந்த காவல்துறையினர் அவர்களை வெளியேற்றியதுடன், அவர்கள் மீது பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் 3 சட்டத்தின் கீழ் மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிவு 447- அத்துமீறி நுழைதல் (குற்றமபுரியும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைதல்), பிரிவு-188 அரசாங்க அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்படியாமல் இருத்தல், அதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்; பிரிவு-505(1) பி மக்களிடம் பயம் அல்லது பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராக குற்றம் புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், விநியோகித்தல் ஆகியவை தான் அந்தப் பிரிவுகளாகும். இதில் பிரிவு-505(1) பி, என்பது பிணையில் விடமுடியாத சட்டப்பிரிவாகும்.
காவல்துறையினரின் இந்த செயலை ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டித்துள்ளதுடன், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுமாறும் கோரியுள்ளனர்.