இலங்கை துணை தூதரகத்துக்கு முருகன் சென்றுவர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

murugan இலங்கை துணை தூதரகத்துக்கு முருகன் சென்றுவர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகனுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்காக இலங்கைத் துணை தூதரகம் சென்று வர அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்தது. இந்த நிலையில், இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் எனது கணவர் முருகன் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான கடவுச்சீட்டு வழங்க கோரி இருவரும் விண்ணப்பித்திருந்தோம். நேர்காணலுக்காக ஜனவரி 30 ஆம் திகதி அழைக்கப்பட்டோம். என்னுடைய நேர்காணல் முடிந்துவிட்டது. இந்த நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்காததால், கணவர் முருகன், இலங்கை துணை தூதரகம் அழைத்தபோது ஆஜராக முடியவில்லை. திருச்சி முகாமில் உள்ள மோசமான சூழல் காரணமாக ஏற்கெனவே ஒரு மாதத்தில் 2 பேர் இறந்துள்ளனர். எனவே, என்னுடைய கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக, நாங்கள் இருவரும் மகளுடன் சேர்ந்துவாழ விரும்புகிறோம்.

எனவே எனது கணவர் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.