இலங்கையின் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு

இலங்கையின் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாற வாய்ப்புள்ளது.

இது புயலாக மாறினால், புரவி என மாலத்தீவு வழங்கிய பெயர் சூட்டப்படும். இந்த புரவிப் புயல் நாளை காலை   வலுப்பெற்றால் இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடக்கும். இதன் காரணமாக அடுத்த 4 நாட்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம், தமிழகம், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை காலை (புரெவி) புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடக்கும். டிச.,3ம் திகதி காலை தென்தமிழக கடல் பகுதியை நெருங்கும். இன்று (டிச.,1) தஞ்சாவூர், திருவாரூர், நாகைப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழைக்கும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகைப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. டிச.,3ம் திகதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.” என்றார்.