இந்த அரசு விவசாயிகளுக்கானது – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த அரசு விவசாயிகளுக்கானது  என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றுகையில்,

“2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப் பாக்கப்படும். பருப்பு வகைகள், கோதுமை, அரசி மற்றும் பிற பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2013 -14 ஆம் ஆண்டில் நெல் கொள்முதலுக்காக 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. அது ஒரு இலட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இந்த வருடம் அது ஒரு இலட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். கடந்த வருடம் இதனால் 1.2 கோடி விவசாயிகள் பலனடைந்தனர். இந்த வருடம் 1.5 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.

2013-14ஆம் ஆண்டு அரசாங்கம் கோதுமையை 33 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கொள்முதல் செய்தது. 2019ஆம் ஆண்டு அதுவே 63 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அது 75 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் இதனால் 43 இலட்சம் விவசாயிகள் பலனடைந்தனர்.

2021ஆம் ஆண்டு, கோதுமை விளைவிக்கும் விவசாயிகளுக்கு 75,100 கோடி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்டதில் 43.36 இலட்சம் கோதுமை விவசாயிகள் பலனடைந்துள்ளனர். முன்னர் அது 35.57 இலட்சமாக இருந்தது” என்றார்.