அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் நாட்டின் நிலைமை மோசமாகும் – ஹக்கீம்

ஆட்சி செய்வதில் சீர்திருத்தங்களை ஏற்படுத்திக் கொள்வதோடு, அரசாங்கம் இழைத்து வரும் தவறுகளையும் திருத்திக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினரின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும். நாட்டின் நிலைமை கவலைக்கிடமானது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம், நிதியமைச்சின் பிஸ்கால் முகாமைத்துவ அறிக்கையில் 2020, 2021 திறைசேரி செயற்பாடு மற்றும் நிதிப் பிரிவின் கீழ் எளிதான வெளிப்படையான திறமையான வரித் திட்டத்தின்படி 2019 இறுதிப் பகுதியிலும், 2020 ஆரம்பத்திலும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அது பின்னர் 2020 நவம்பர் மாதத்தில் அத்தாட்சிப் படுத்தப்பட்டது.

கோவிட் – 19 வைரஸ் தொற்று பொதுவாக உலகம் முழுவதிலும் குறிப்பாக, இலங்கையில் மிகவும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும் வேளையில், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. நிதி முகாமைத்துவமானது உறுதியான நிதி சார்ந்த தீர்மானங்கள் பொருளாதார யதார்த்தங்கள், பாரிய பொருளியல் அடிப்படைகளை ஆகியவற்றை அனுசரித்தே மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரலானது எதிர்காலத்தை முன்னோக்கித் தீர்மானங்களை எடுப்பதில் திட்டவட்டமற்ற நிலைமையையே காண்பிக்கின்றது.

நேற்று இவ்வாறானதொரு விடயத்தைப் பற்றி இங்கு குறிப்பிட்டேன். ஐரோப்பிய ஒன்றியம் அதன் பாராளுமன்றத்தில் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் (GSP Plus) சலுகையை மீளப் பெறுவதை வற்புறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.

இன்று காலையில் நிதி இராஜாங்க அமைச்சர் இங்கு உரையாற்றுகையில், ஜிஎஸ்பி பிளஸ் விவகாரத்தில் அரசாாங்கம் இராஜதந்திர வழிமுறைகளை கையாளுகின்ற அதேவேளையில், நிபந்தனைகளைப் பொறுத்தவரை அதற்கு நிகரான வேறு மாற்று வழிகளையும் கண்டறிய வேண்டும் என்றார்.

மாற்று வழிவகைகளை தேடுவதற்கு முன்னர் கள நிலவரத்தின் யதார்த்தத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்.

மத்திய வங்கியின் 2020 ஆண்டறிக்கையின் பிரகாரம் ஏற்றுமதி பெறுமதி எல்லாமாக 9.8பில்லியன் ஆகும். அதில் ஐரோப்பிய ஒன்றியம் எங்களது மொத்த ஏற்றுமதியில் 31.6 வீதத்தை கொள்வனவு செய்கின்றது. அது அமெரிக்க டொலர் 3.1பில்லியன் பெறுமதியானது. ஐக்கிய அமெரிக்கா எங்களது ஏற்றுமதியில் 24.9 வீதத்தை கொள்வனவு செய்கின்றது. அது அமெரிக்க டொலர் 2.5 பில்லியனுக்கு சமமானது. மத்திய கிழக்கு நாடுகள் எங்களது ஏற்றுமதியில் 9.1 வீதத்தை கொள்வனவு செய்கின்றன. அது 900 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது. இந்தியா எங்களது மொத்த ஏற்றுமதியில் 6 வீதத்தைக் கொள்வனவு செய்கின்றது. அது 606 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது. இவ்வாறான எல்லா நாடுகளையும் ஒன்றாகச் சேர்த்து நோக்கும் போது இலங்கை பெறுகின்ற ஏற்றுமதி வருமானம் 7.1 பில்லியன் அமெரிக்கா டொலர்களாகும்.

இவையனைத்தும் இப்பொழுது தடைப்படப் போகின்றன. மனித உரிமைகள் விடயத்தில் எமது நாடு நடந்து கொள்கின்ற நிகழ்ச்சி நிரலின் விளைவாகவே இந்த நிலைமை ஏற்படுகின்றது.

ஆகையால் தான், பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப் பெறுமாறு அல்லது அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்து உங்களது பலத்தைக் காண்பிக்க முயற்சிக்கின்றீர்கள், அதைக் கொண்டு அரசியல் எதிரிகளை கைது செய்கின்றீர்கள். அப்பாவிப் பொது மக்களை நீண்ட காலமாகத் தடுத்து வைத்திருக்கின்றீர்கள். அவர்களை வற்புறுத்தி ஒப்புதல் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொள்கின்றீர்கள்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஷானி அபேசேகரவின் பிணை மனுமீதான தீீர்ப்பில் அரசாங்கம் குற்றமிழைத்ததாகக் குறிப்பிடப்பட்ட து. அரசாங்கமும் குற்றப் புலனாய்வு திணைக்களமும், குற்றத் தடுப்பு பிரிவும் குற்றமிழைத்ததாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
(இந்தச் சந்தர்ப்பத்தில் உறுப்பினர் ஒருவர் எழுந்து, குறுக்கீடு செய்து இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி சபையில் குறிப்பிடக் கூடாது என்றார்.

அவ்வாறில்லை. இந்த மனு மீது ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்தின பிணை வழங்கித் தீர்ப்பளிக்கும் போது சாட்சியங்கள் புனையப்பட்டவை என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவற்றின் காரணமாகத் தான் நாம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இழக்க நேர்ந்துள்ளது. பெரும்பாலும் 7.1 பில்லியன் ஏற்றுமதி வருமானத்தை மேற்கு நாடுகளிடமிருந்து இலங்கை இழக்கின்றது.

அரசாங்கம் எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை.

சீனாவுக்கு செலுத்தும் இறக்குமதிக்கான கொடுப்பனவு 3.6பில்லியன் ஆகும்.அது பெரும்பாலும் எமது மொத்த ஏற்றுமதி வருமானத்திற்குச் சமமானது. எல்லா பணத்தையும் சீனாவுக்கு தாரை வார்க்கின்றீர்கள். இது தான் யதார்த்தம். நண்பர்கள் சிலரில் தங்கியிருக்கப் போய் ஏனைய நண்பர்களைப் பகைத்துக் கொள்கின்றீர்கள்.

எங்களது வெளிநாட்டுக் கொள்கையை தொடர்ந்தும் இவ்வாறு முன்கொண்டு செல்ல முடியாது. அதில் மாற்றம் வர வேண்டும். அரசாங்கம் இழைக்கும் இவ்வாறான தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டை நீங்கள் ஆட்சி செய்வதில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சிறுபான்மையினரதும், சிறுபான்மை சமயத்தினரினதும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள்.

அஹ்னாப் நஸீம் என்ற இளைய கவிஞர் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். அவரது கவிதைகளை மொழிபெயர்த்துப் பார்த்தால் அவற்றில் பயங்கரவாதம் பற்றி எவையும் இல்லை.

மனித உரிமை ஆணையகத்தின் முன் உங்களது நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாக இருக்கின்றது. ஜெனீவாவில் மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையின் பாரதூரத்தைப் பாருங்கள்.

அது பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களின் மரணம் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு வருடத்திற்குள் பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்த ஏழு நபர்கள் மரணித்துள்ளனர். குற்றம் நிகழ்ந்த இடத்தை காண்பிப்பதற்கென அழைத்துச் சென்று விட்டு, ஜீப் வண்டியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டதால் சுடப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது. போதைப் பொருட்களைக் காண்பிப்பதற்காக கூட்டிச் செல்லப்படுபவர்கள் சிலரும் மரணித்து விட்டதாகக் கூறப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இவை மிகவும் பாரதூரமான விடயங்களாகும்.

இவ்வாறான காரணங்களாலேயே ஜிஎஸ்பி.பிளஸ் சலுகையையும் இழக்கப் போகின்றீர்கள். அவ்வாறானால், பாரிய உற்பத்தியாளர்கள் எவ்வாறாயினும், நடுத்தர சிறிய ரக உற்பத்தியாளர்களினதும், ஊழியர்களினதும், நிலைமை என்னவாகப் போகின்றது ? இதன் இறுதியான பெறுபேறாக நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குள் தள்ளப்படப் போகின்றது என்றார்.