அமெரிக்க தேர்தல் – ஜோர்ஜியா மாநிலத்திலும் பைடன் வெற்றி

ஜோர்ஜியாவில் வெற்றிபெற்றதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியாகியுள்ளது.

அதிபருக்கான போட்டியில் வெற்றி பெறத் தேவையான 270க்கு மேற்பட்ட இடங்களில் பைடன் வெற்றி உறுதியானதால் அவர் அதிபராகத் தேர்வு பெறுகிறார் என்று ஊடகங்கள் முன்னறிவிப்பு (புரொஜெக்ட்) செய்தன.

இந்நிலையில்,தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தும் நிறுவனமான ‘எடிசன் ரிசர்ச்’ இதனை கணித்துள்ளது. பெரும் போட்டி நிலவும் வட கரோலினா மாநிலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம், ட்ரம்புக்கு 232 தேர்வுக் குழு (Electoral college) வாக்குகளும் பைடனுக்கு 306 தேர்வுக் குழு வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப், 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், இதே போன்ற வாக்கு வித்தியாசத்தில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தார். அப்போது, ஹிலாரியின் தோல்வியை ‘இமாலய சரிவு’ என்று ட்ரம்ப் வரையறுத்தார்.

குடியரசு கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப் அவரது தோல்வியை இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் பைடனின் ஆதரவாளர்கள் ஆட்சி மாற்றத்திற்கான பணியில் ஈடுபட போவதாக கூறிள்ளனர்.

பொது மக்களின் வாக்குகள் நேரடியாகத் தேர்தல் முடிவைத் தீர்மானிக்காது என்றாலும், பைடன் 53 லட்ச வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.