கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியுதவி

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடை வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும், இலங்கை மக்களின் தேவைகளுக்கும் உதவியளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தேசிய ஆய்வகங்கள் மற்றும் நோயாளிகளை நிர்வாகிக்க கூடிய முறையை வலுப்படுத்துவதற்கான மருத்துவ உபகரணங்கள், சுகாதார பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தரவுகளை சேகரிக்க கூடிய தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், நாட்டில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பெண்கள் மற்றும் ஏனைய குடும்பங்களுடைய சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான சுகாதார உபகரணங்களையும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவடத்தில் வாழும் சுமார் 3000 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கவும் அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.