டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய ஊடகமான Suspilne க்கு அளித்த பேட்டியில், “டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும். இப்போது வெள்ளை மாளிகையை வழிநடத்தும் புதிய அணியின் கொள்கைகளே இதற்குக் காரணமாக இருக்கும். நிச்சயம் இது நடக்கும். ஏனெனில், இது அவர்களின் அணுகுமுறை, அவர்களின் குடிமக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதி.” என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதில் (பிப்ரவரி 2022) இருந்து, உக்ரைனுக்கு வழங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் உதவியை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். மேலும், தான் அதிபரானால் அடுத்த 24 மணி நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்றும் அவர் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.