தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனை போற்றி முகநூலில் கருத்து வெளியிட்டிருந்த திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் காவல்துறை குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டிச் சாரதியாக கடமையாற்றும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட காவல்துறைப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண,
“தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை இட்டிருப்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல், சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ் குற்றமாக கருதப்படுகின்றது” என்றார்.
மேலும் குறித்த இளைஞனிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியாகிய “மேதகு” திரைப்படம் தொடர்பான பதிவை முகநூலில் பகிர்ந்தமைக்காகவே குறித்த இளைஞன் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.