‘இலங்கை வேண்டாம்’: படகில் வெளியேறிய 303 இலங்கையர்களுக்கு தஞ்சம் கோர வாய்ப்பளிக்கப்படுமா?

அண்மையில்,  303 இலங்கையர்கள் கனடாவுக்கு படகில் செல்ல முற்பட்டதையடுத்து   இலங்கையில் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேறு நாடுகளில் படகில் தஞ்சமடைய முயன்றவர்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. 

இதுவரை இல்லாத அளவில்  303 பேர் என பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் படகு மூலம் கனடாவுக்கு செல்ல முற்பட்டு, நடுக்கடலில் விபத்துக்கு உள்ளாகி மீட்கப்பட்டு வியாட்நாமில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஈழத்தமிழர்களாக இருக்கின்றனர். இவர்கள் வெளியேறியதற்கான காரணம் பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாத இன ரீதியான பாதுகாப்பின்மை என்ற மற்றொரு காரணமும் இருப்பதை அவர்களது கோரிக்கை காணொலிகள் சுட்டிக்காட்டுகின்றன.

40 மணிநேரம் தத்தளித்த அகதிகள்

இவர்கள் முகவர்களின் அறிவுறுத்தலின் பெயரில், முன்னதாக கடவுச்சீட்டு மூலம் விமானம் வழியாக மியான்மருக்கு பயணித்து மியான்மரிலிருந்து கனடாவுக்கு செல்ல முயன்றிருக்கின்றனர்.

மியான்மரிலிருந்து 300க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கி புறப்பட்ட லேடி ஆர்3 எனும் மியான்மர் மீன்பிடி கப்பல் பிலிப்பைன்ஸ்- வியாட்நாம் கடல்பகுதி இடையே விபத்துக்கு உள்ளான பின்னர் கப்பலின் கேப்டன் கப்பலை விட்டு வெளியேறி இருக்கிறார்.

303 இலங்கையர்களையும் ஜப்பானிய கப்பல் மீட்பதற்கு முன்னதாக 40 மணி நேரம் அவர்கள் தத்தளித்து வந்ததாக வியாட்நாமிய நாளிதழ் Toui Tre குறிப்பிட்டுள்ளது.  மீட்கப்பட்ட இலங்கையர்களை வியாட்நாமின் Ba Ria – Vung Ta மாகாண அதிகாரிகள் மூன்று கட்டிடங்களில் தங்க வைத்து உணவு வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 20 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

வியாட்நாமும் அகதிகள் சாசனமும்

இந்தியா, மலேசியா போன்ற நாடுகளைப் போலவே வியாட்நாமும் ஐ.நா. அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத நாடாக உள்ளது. இதனால் இந்த அகதிகளை பொறுப்பேற்கும் கடமையை வியாட்நாம் முழுமையாக ஏற்குமா என்பது பெரும் சந்தேகத்துக்குரிய கேள்வியாகும்.

இவர்கள் குறித்த ஆராய்வை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மேற்கொண்டுள்ள போதிலும் இந்த அகதிகளின் தஞ்சக்கோரிக்கை முறையாக பரிசீலிக்கப்படுமா என்ற அய்யம் எழுந்துள்ளது.

இந்த இலங்கையர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வியாட்நாம் தரப்புடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

படகில் வருபவர்களை நாடுகடத்தும் அவுஸ்திரேலியா

ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசு நாடுகடத்தி இருக்கிறது. இதே போல் சட்டவிரோதமாக படகில் வருபவர்களை நாடு கடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியாவுடன் வியாட்நாம் கொண்டிருக்கிறது. தற்போது வியாட்நாமில் உள்ள இலங்கையர்கள் கனடாவுக்கு செல்ல முற்பட்டவர்கள் என்றாலும் இது ஒருவகையில் அவுஸ்திரேலியாவுக்கும் ஆபத்து என அவுஸ்திரேலிய அரசு கருதக்கூடிய வாய்ப்புள்ளது. இது இந்த இலங்கையர்களை நாடுகடத்துவதற்கான அழுத்தத்தை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

தங்களை இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாது, இலங்கை வேண்டாம், வேறொரு பாதுகாப்பான நாட்டில் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்ற இலங்கைத் தமிழ் அகதிகளின் கோரிக்கை ஏற்கப்படுமா, மனிதாபிமான ரீதியில் தமிழ் அகதிகள் அணுகப்படுவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.