இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது.
இப்பேரணியானது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்தகர மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்ச ஆகியோர் கலந்து கொண்டதுடன், மாவட்ட செயலாளரால் குறித்த பேரணியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் இப்பேரணியானது பஜார் வீதியின் ஊடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக முடிவடைந்திருந்தது.
இதேவேளை குறித்த பேரணியில் கலந்து கொண்ட வாகனங்கள் அனைத்திலும் தேசியக்கொடி கட்டப்பட்டு, மூவின மக்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நடனங்கள் இடம்பெற்றதுடன், நாடோடிகளும், விசேட தேவைக்குட்பட்டவர்களும் கலந்து கொண்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.