இலங்கையில் ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டத்துடன் நோர்வேயும் இணைவு

இலங்கையில் அமைதி, நீதி மற்றும் வலுவான கட்டமைப்புக்களை கட்டியெழுப்புவதை முன்னிறுத்திய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்முயற்சிக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நோர்வே முன்வந்துள்ளது.

இலங்கையில் 2023 – 2026 ஆண்டு காலப்பகுதியில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் 16ஆவது இலக்கான அமைதி, நீதி மற்றும் வலுவான கட்டமைப்புக்களை கட்டியெழுப்பல் செயற்திட்டத்துக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்துடன் இணைந்து நோர்வே அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது.

சுமார் 1.2 மில்லியன் டொலர் பெறுமதியான இச்செயற்திட்ட ஒப்பந்தத்தில் நோர்வே அரசாங்கத்தின் சார்பில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஜொரான்லியும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் சார்பில் அவ்வமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூஸா குபோட்டாவும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இச்செயற்திட்டத்தின் ஊடாக 16ஆவது நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு அவசியமான வழிகாட்டல்கள் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்படும்.