தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த சூறாவளி காரணமாக தாய்வானில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வௌ்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.

தாய்வானின் கிழக்கு ஹுவாலியனில் உள்ள ஒரு ஏரியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் 14 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்த அனர்த்தத்தில் 120க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தாய்வானின் தீயணைப்பு படை அறிவித்துள்ளது.

அதேநேரம், இந்த சூறாவளி காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே ஹொங்கொங் தமது எச்சரிக்கையை 10ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது, இது உச்சபட்ச எச்சரிக்கையாகும்.

இதன்காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், ரகாசா சூறாவளி ஹொங்கொங்கை தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணிநேரம் மூடப்பட்டுள்ளது.

தெற்கு சீன பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக பாரிய மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்கூறப்பட்டுள்ளது.