வன்னி மண்ணின் வீரமிகு மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி நாளான இன்று முல்லைத்தீவில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றி கொண்டதன் 218 ஆம் ஆண்டு வெற்றி நாளான (25) இன்று முல்லைத்தீவில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் பண்டாரவன்னியனுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கோவிட் 19 பரவல் காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலமையால் வருடந்தோறும் பண்டாரவன்னியன் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்படும் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்கு செல்ல முடியாத நிலையில், ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஆங்கிலேயரின் கோட்டையை 1803ம் ஆண்டு இதேநாளில் போரிட்டு கைப்பற்றி இரண்டு பீரங்கிகளையும் மாவீரன் பண்டார வன்னியன் கைப்பற்றிய நாளாக இன்றைய நாள் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவேத்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது