”உயிரிழந்த உறவினர்களை எவருக்கும் சட்டப்படி நினைவுகூர முடியும். ஆனால், புலிகளின் சின்னத்தையோ சீருடைகளையோ அவர்களின் படங்களையோ பயன்படுத்தி மாவீரர்களை கொண்டாடுவதற்கு இடமில்லை. நாட்டில் சட்டம் உள்ளது. சட்டத்தின் படி புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு. என்றாலும், வடக்கு, கிழக்கு, தெற்கு அல்லது மலைப் பகுதி என எதுவாக இருந்தாலும், உங்கள் உறவினர், பிள்ளைகள் எவரும் உயிரிழந்திருந்தால் அவர்களை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உண்டு.” இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும், நாளையும் இடம்பெற உள்ள மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் யுத்தத்தில் உயிர்த்தவர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளை முழுமையாக கண்காணிக்க இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் பாதுகாப்பு அமைச்சால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூரும் வகையில் இன்றும், நாளையும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிழக்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கின் அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் சில நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகளை முழுமையாக கண்காணிப்பதற்கான ஆலோசனைகளை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார். அதேபோன்று பாதுகாப்பு அமைச்சின் சார்ப்பில் இராணுவத்தினருக்கு கண்காணிப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரண்டு தினங்களிலும் அனுஷ்டிக்கப்படும் நிகழ்வுகளையும், நிகழ்வில் கலந்துகொள்பவர்களது செயல்பாடுகளையும் கண்காணிப்பதற்காக பாதுகாப்புப் படையினரை விழிப்புடன் வைத்திருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் பயங்கரவாத அமைப்பை அல்லது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நினைவுகூரும் எந்தவொரு நபரையும் கைது செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கில் பல பகுதிகளில் மயானங்களில் இடம்பெறும் துப்பரவு நடவடிக்கை குறித்து வடக்கு பாதுகாப்பு தரப்பினர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் உரிய நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
நாளை நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நிகழ்வுகளை அனுஷ்டிக்க வடக்கு, கிழக்கில் உள்ள சில சிவில் அமைப்புகளும், சர்வதேச ரீதியில் இயங்கும் தமிழ் அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
உயிரிழந்தவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களை அனுஷ்டிக்கும் நிகழ்வுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.