ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த வாக்னர் ஆயுதக் குழு, தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கியுள்ளது

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது.

போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்துவதாக வாக்னர் ஆயுதக் குழு அறிவித்துள்ளது. அதிபர் புதினின் முன்னாள் கூட்டாளியும் வாக்னர் ஆயுதக் குழுவை நடத்துபவரான யெவ்ஜெனி பிரிகோஜின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஷ்ய இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள்.

கிளர்ச்சியாளர்களுக்கான பாதுகாப்பிற்கான உத்தரவாதம் பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அலுவலகம் மூலமாக கொடுக்கப்பட்டதால், ரஷ்யா முழுவதும் வாக்னர் போராளிகளின் இயக்கத்தை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, போராளிகள் உக்ரைனில் தங்களின் கள முகாம்களுக்கு பின்வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவுக்கு முன்னேற, 200 கிலோமீட்டர்கள் (120 மைல்) தொலைவே இருந்த நிலையில், வாக்னர் ஆயுதக் குழு பின்வாங்கி இருப்பது அதிபர் புதினுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.