கிழக்கு மாகாணத்தில் சீன அரசின் பல்வேறு திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு ஏழு மாதங்களுக்கான அன்பளிப்பு தொகையான 4.3 மில்லியன் ரூபாய் நிதியை சீன தூதுவரினால் இன்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
சீன மக்கள் குடியரசின் புலமைப்பரிசில் வழங்கும் விழா மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பாதுகாப்பு அறிவியல் பீட மண்டபத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக சீன மக்கள் குடியரசின் தூதுவர் குய் ஜென்ஹாங் மற்றும் திருமதி.குய் ஜென்ஹாங் உள்ளிட்ட சீன தூதுவர் காரியாலய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சீன மக்கள் குடியரசின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக கல்விசார்ந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் வகையில், சீன மக்கள் குடியரசின் இலங்கை தூதுவரால் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு முதற்கட்டமாக மாதாந்தம் 4 ஆயிரம் ரூபா வீதம் ஏழு மாதங்களுக்கான அன்பளிப்பு தொகையான 4.3 மில்லியன் ரூபாய் நிதி சீன தூதுவரினால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.