கலைஞர்கள் , ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்று அதே சட்டத்தை மிக மோசமான முறையில் பயன்படுத்தி கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த இரட்டை வேட அரசியலும், இனவாதத்தைக் கிளறிவிட்டு அரசியல் இலாபம் தேடும் சதித்திட்டங்களும் நாட்டை மீண்டும் ஒரு அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி வன்மையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

நுகேகொடவில் அமைந்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, மக்கள் போராட்ட முன்னணியின் ஒருங்கினைப்பாளர் துமிந்த நாகமுவ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாகப் பகிரங்கமாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்தச் சட்டத்தை ஒழிக்கப் போவதில்லை என்றும், புதிய சட்டம் வரும் வரை அதனைப் பக்குவமாகப் பயன்படுத்துவதாகவும் கூறி, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கத் தொடங்கியுள்ளது. இதற்கமைய, கனேஷ் குமார் எனும் கலைஞர், ஒரு பாடலைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாகக் கூறி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, ஒரு கலைஞனைத் தண்டிப்பதற்கான போலியான முத்திரையாகும்.

தங்கள் தேர்தல் பிரசாரங்களின் போது, அதே போன்ற பாடல்களைப் பாடி, பிரபாகரன் மற்றும் ஈழம் குறித்துப் பேசியவர்களால் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்ததென்றால், இன்று மற்றுமொருவர் பாடும்போது அது பயங்கரவாதமாக மாறுகிறது. இதுவே இந்த அரசாங்கத்தின் தார்மீகமற்ற இரட்டை வேடமாகும். அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு, அரசாங்கம் துணை போவது கண்டிக்கத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வெசாக் கூடு உடைப்பு சம்பவம், சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் இணைந்து செய்த காரியமல்ல் இது சில இனவாதிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகும். சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்பி, மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேடச் சிலர் துடிக்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் சங்கமே இந்தப் பழிசொற்களைப் பகிரங்கமாக நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நாட்டில் தமிழ் பௌத்தர்களும் உள்ளனர் என்பதை மறந்த சில குழுக்கள், பௌத்த தர்மத்தின் பெயரால் இனவாதத்தை விதைக்கின்றனர். யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட காலத்தைப் போலவே, இன்றும் இவ்வாறான வன்முறைகளைத் தூண்டிவிட்டு அப்பாவி மக்கள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இதற்குப் பலியாக வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விவகாரங்களில் புலனாய்வுத் துறையினரின் பங்கு குறித்து இன்று பேசுபொருளாகியுள்ள நிலையில், அரசாங்கம் கவனத்தைத் திசைதிருப்ப இவ்வாறான அடக்குமுறைகளைக் கையாள்கிறது.

கடந்த காலங்களில் இனவாதத்தைக் கிளறிவிட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள், இன்று அந்தப் பழைய அரசியலையே பின்பற்றுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதான தரப்பினர் ஒருவித இரகசியப் புரிதலுடன் செயற்படுவதால், மத்திய வங்கி மோசடி அல்லது ஏனைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து எவரும் பேசுவதில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு கூட்டமாகச் செயற்படுவதால், அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்பட வழிவகுக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல. மக்கள் போராட்டத்தின் உண்மையான அபிலாஷைகளை நிறைவேற்றவும், இனவாதத்தை நிராகரிக்கும் உண்மையான மக்கள் சார்ந்து இயங்கும் எதிர்க்கட்சியை உருவாக்கவும் மக்கள் ஒன்றிணைய வேண்டும். அரசாங்கத்தின் இந்த அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார்.