மாகாண அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த அரசுக்கு ஒரு வார கால அவகாசம் : தமிழ்க் கட்சிகள்

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதென்றும், அந்த காலஅவகாசத்திற்குள் அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத் தப்படாவிட்டால், அரசாங்கத்துடனான பேச்சை தொடர்வதில்லையென்றும் தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இரா.சம்பந்தனின் வீட்டில்  நேற்று மாலை கூடிய தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. நாளை 10ஆம் திகதி அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்பிற்குமிடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பேச்சின் போது முன்வைக்கப்பட வேண்டிய விடயங்களை ஆராய இன்று தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பில் ஈடுபட்டன. இதன்போது, அரசியலமைப்பின்படி மாகாணங்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்கவும் அரசாங்கத்திற்கு குறுகிய கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அரசியலமைப்பின்படி மாகாணங்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்கவும் அரசாங்கத்திற்கு குறுகிய கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதிக்கள்- ஒரு வாரத்திற்குள்- மாகாண அதிகாரங்கள், ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தின் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ முழுமையாக மீளளிக்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒரு வாரத்திற்குள் மீளளிக்கவில்லையென்றால், இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கி தீர்வை தருமென்பது பகல் கனவாகவே அமையும் என்ற அடிப்படையில், அரசாங்கத்துடனான பேச்சை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.