பூமி சுற்றுவது நின்றால் மாத்திரமே தேர்தல் நிறுத்தப்படும்-மஹிந்த தேசப்பிரிய

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படாதென தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பூமி சுற்றுவது நின்றால் மாத்திரமே தேர்தல் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று (12) கம்பஹா மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறித்து பல்வேறு அபிப்ராயங்கள், யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் இவை எதுவும் தேர்தலை பிற்போட காரணமாக அமையாது என்றும் தெரிவித்துள்ளார்.

​கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருந்தாலும் அவற்றைத் தடுக்க சுகாதாரப் பிரிவினர் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வேட்பாளர்களைப் போல, வாக்காளர்களும்  உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் இவ்வாறு பின்பற்றினால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாதென்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.