விரைவில் ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை!

ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் ஈரானில் நடந்த போராட்டங்களின்போது, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒடுக்குமுறையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கும் சூழலில், ஈரான், அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன.

துருக்கி மற்றும் பல நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக இஸ்மாயில் பகாய் ஈரானின் அரசு செய்தி ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ-விடம் கூறியுள்ளார். இருப்பினும், எந்த இடமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும்.

செவ்வாய்க் கிழமையன்று மாலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஈரானுடனான பேச்சுவார்த்தை செயல்முறை நடைபெற்று வருவதை உறுதி செய்தார்.

முன்னதாக, ஈரானிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃபின் திட்டமிடப்பட்ட அட்டவணை மாறாமல் அப்படியே இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

இதற்கு முன்னர், அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பல் ஓர் ஈரானிய ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதால், பேச்சுவார்த்தைகள் தடைபடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.