தையிட்டியில் காவல்துறையினர் நடந்துகொண்ட விதம், நாடு இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற அமைதி வழிப் போராட்டத்தின்போது, காவல்துறையினர் இடையூறுகளை ஏற்படுத்தி அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தனர்.
மதகுருவான வேலன் சுவாமிகளை மிலேச்சத்தனமாக தாக்கி, அவரை காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
அதேவேளை மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனையும் தள்ளி வீழ்த்தியுள்ளனர். அத்துடன், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வரை அடித்து இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அராஜகம் செய்துள்ளனர்.
இந்த காவல்துறையினரின் அராஜகத்தை தமிழ் மக்கள் கூட்டணி மிக வன்மையாக கண்டிக்கிறது.
காவல்துறையினரின் இந்த செயற்பாடானது நாடு இரண்டாக பிளவுபட்டு உள்ளமையையே காட்டி நிற்கிறது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும், சிங்கள பௌத்த தீவிரவாதப் போக்கில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.
திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பிலான பிரச்சினையின்போது பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தார். அதற்கு எதிராக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர்.
ஆனால், வேலன் சுவாமிகளை மிலேச்சத்தனமாக தாக்கி கைது செய்துள்ளனர். வேலன் சுவாமிகள் ஒரு பௌத்த பிக்குவாக இல்லாமைதான் இதற்கு காரணம். வேலன் சுவாமிகளிடம் நடந்துகொண்டதைப் போன்று, ஒரு பௌத்த பிக்குவிடம் பொலிஸாரினால் நடந்துகொள்ள முடியுமா?
வேலன் சுவாமிகள், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் தம் மீது காவல்துறை மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
அவர்கள் அவ்வாறு காவல்துறையினருக்கு எதிராக வழக்கு தொடர விரும்பின், சட்டத்தரணி என்ற ரீதியில் நாமும் எமது கட்சியும் பக்கபலமாக அவர்களுக்காக நிற்போம் என இவ்விடத்தில் உறுதியாகக் கூறுகிறேன்.
அதேவேளை வலி. வடக்கு பிரதேச சபையிடமும் அன்பான கோரிக்கை ஒன்றினை விடுக்கிறேன். உங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சாதாரண குடிமகன் ஒரு கட்டடத்தை அமைக்கும்போது, பிரதேச சபையின் அனுமதி பெறாவிடின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றீர்கள். அதேபோன்று தையிட்டி விகாரையில் இடம்பெறும் சட்ட விரோத கட்டடங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகிறேன் என தெரிவித்தார்.



