மீண்டும் கதிரை சின்னத்தில் தேர்தலில் களமிறங்கும் சுதந்திரக் கட்சி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் கதிரை சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக’ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்னர் கூறியவற்றை இப்போது செயற்படுத்த முடியாது என்பதை நிலைநிறுத்தியுள்ளது என்று தான் எண்ணுவதாக’ துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.

“கதிரை சின்னம் என்பது 17 வருடங்கள் எதிர்க்கட்சியிலிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, 1994 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாட்டுக்குப் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளப் பயன்படுத்திய சின்னமாகும்’. ‘அந்த சின்னத்தையே இம்முறை நாங்கள் பயன்படுத்துகின்றோம்’.

‘இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச சபைகளிலும் இந்த சின்னத்திலேயே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்’.  ‘அதனாலேயே தற்போது நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வருகை தந்தோம்’. ‘தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட கூட்டணியிலேயே போட்டியிடுகின்றோம்’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

‘அனைவரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள்’. ‘கடந்த தேர்தலில் நாட்டின் அனைத்து இன மக்களும் மிகப்பெரிய ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள்’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.