இலங்கை EXPO – 2027 : இராஜதந்திரிகளுக்கு அமைச்சர் விஜித்த விளக்கம்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை எக்ஸ்போ – 2027 குறித்த இராஜதந்திர விளக்கக் கூட்டம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தூதரகப் பணியகங்களின் தலைவர்கள், கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திர அணியின் பிரதிநிதிகள், புதுடில்லி மற்றும் பிற வெளிநாட்டுத் தலைநகரங்களைத் தளமாகக் கொண்ட மற்றும் இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர அதிகாரிகள் மெய்நிகர் நிலையில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் இணைத் தலைமை தாங்கினர்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

வரவேற்புரை ஆற்றிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ, 2027 ஜனவரி 14 முதல் 17 வரை கொழும்பில் உள்ள BMICH-இல் நடைபெறவுள்ள EXPO – 2027, சமீப ஆண்டுகளில் இலங்கையில் நடைபெறும் மிகப் பெரிய சர்வதேச வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித்த ஹேரத், சர்வதேச பொருளாதார ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கவும், உலக நாடுகளுடனான கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும் இலங்கை – EXPO 2027 ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது  என்றார்.
வர்த்தக சமூகங்கள், வர்த்தக சபைகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் முதலீட்டாளர் குழுக்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதில் தூதரகங்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கையும் அமைச்சர் ஹேரத் வலியுறுத்தியதுடன், கொழும்பில் நடைபெறும் இலங்கை – EXPO 2027இல் கலந்துகொள்ளுமாறு அரசாங்கங்கள், நிறுவகங்கள் மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.