“நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறிதரன் உள்ளிட்டோர் உதவ வேண்டும்” : அரசாங்கம் தெரிவிப்பு

நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த ஊடகவியலாளர்களால் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தேசிய சுதந்திர தினம் என்பது நாட்டிலுள்ள சகல மக்களுக்குமானதுமான தினமாகும். இதில் எவ்வித இன, மத, மொழி பேதமும் இல்லை” என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். சுதந்திர தினத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்”.

“அதற்காக ஒன்றிணையுமாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்”.
“சில சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் காணப்படும் போட்டி அல்லது அரசியல்வாதிகளுக்கிடையிலான போட்டி, தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு மக்கள் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்” என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“சுதந்திர தினம் அல்லது ஏனைய தேசிய நிகழ்வுகளின் போது நாட்டு மக்கள் ஒன்றிணையும் போது, இவ்வாறான கருத்துக்களை வெளியிடப்படுவதை தொடர்ச்சியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.”
“இவை சில அரசியல்வாதிகளிடத்தில் காணப்படும் பிரச்சினையே அன்றி, அது நாட்டு பிரச்சினையல்ல. எனவே அவரால் அவ்வாறானதொரு கருத்து தெரிவிக்கப்பட்டிருக்குமானால் அது கவலைக்குரியதாகும்” அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.