உலகம் முழுவதும் முதன் முறையாக தொடர்ச்சியாக பல மணி நேரம் முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கிய நிலையில், வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய முகநூல் நிறுவனர், தலைவர் மார்க் ஜூக்கர்பர்க் அவர்கள், தடங்கலுக்கு வருந்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், “முகநூல், இஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெஸன்ஞர் சேவைகள் இப்போது திரும்பக் கிடைக்கின்றன. தடங்கலுக்கு வருந்துகிறேன். நீங்கள் அனைவரும் நீங்கள் நேசிக்கும், உங்கள் அக்கறைக்கு பாத்திரமானவர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல், “வாட்ஸ் அப் சேவையைப் பயன்படுத்துவதில் சிக்கலை சந்தித்த அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம்” என வாட்ஸ் அப் தனது சேவை முடக்கம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தது.
உலகம் முழுவதும் உள்ள இணைய சேவைகளின் தடங்கல்கள், முடக்கம் ஆகியனவற்றை கணிக்கும் டவுன்டிடக்டர் என்ற நிறுவனம் சமீப காலத்தில் ஏற்பட்ட மிக நீண்ட முடக்கம் இதுவென்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த முடக்கத்தால் உலகம் முழுவதும் 10.6 மில்லியன் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 2019ம் ஆண்டில் முகநூல் சேவை முடங்கியது. எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சுமார் 17 நிமிடங்கள் இந்த சேவைகள் முடங்கி மீண்டது. ஆனால், நேற்று தொடர்ச்சியாக பல மணி நேரம் ஒரே நேரத்தில், முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.