சிங்கள பௌத்த மயமாகும் வவுனியா வடக்கு-அன்று கச்சல் சமணங்குளம் இன்று சபுமல்கஸ்கட..!

வவுனியா வடக்கின் தெற்குப் பக்கமாக இருக்கின்ற அடர் காடுகளுக்குள் நுழைந்து பார்த்தால், பெருமரங்கள் மட்டுமே நிற்கின்றன. காடுகளுக்குள் மிக விரைவாக குடில்கள் முளைக்கின்றன. அடர் காடுகள் என அடையாளமாகியிருந்த இடங்கள், செறிவான மரங்களுடையனவாக மாறிக்கொண்டிருக்கின்றன. எங்கிருந்தோ வரும் சிங்கள மக்களும், பௌத்த மத தலைவர்களும் தங்களுக்கான இடங்களைப் பிடிப்பதிலும், புதிய கட்டடங்களை அமைப்பதிலும் இரவு பகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.

IMG 20201107 093853 சிங்கள பௌத்த மயமாகும் வவுனியா வடக்கு-அன்று கச்சல் சமணங்குளம் இன்று சபுமல்கஸ்கட..!

கச்சல்சமணங்குளம் அடர் காட்டுப் பகுதியில் ‘சபுமல்கஸ்கட தொல்லியல் வேலைத்தல’ எனும் பெயர்ப்பலகையை நாட்டி, தொல்பொருள் அடையாளங்கள் நிறைவாக உள்ள பகுதிகளை சிதைத்து, பழையகால தூண்களை நிறுத்தி வனப்பகுதிக்குள்ளேயே களிமண்களால் கல் அரிந்து செங்கற்களாக சூழைவைத்து பழைய பௌத்தமத வணக்கஸ்தலம் போன்ற சாயலில் பாரிய கட்டுமான வேலைகள் வனப்பகுதிகளுக்குள் நடைபெற்று வருகின்றன.

அங்கு பௌத்த துறவிகள் தங்குவதற்கு மரத்தினாலான சொகுசு வீடுகள் கட்டப்படுகின்றன.  நூற்றுக்கணக்கான வேலையாட்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், வனத்துறையினர் சீ.எஸ்ரி ஊழியர்களென பலர் மிகவும் விரைவாக கட்டுமானப் பணிகளில் ஈடபட்டு வருகின்றனர்.

IMG 20201107 093946 1 சிங்கள பௌத்த மயமாகும் வவுனியா வடக்கு-அன்று கச்சல் சமணங்குளம் இன்று சபுமல்கஸ்கட..!

நாடு கொரோனா வைரஸ் தாக்கத்தின் பக்கம் திரும்பி, வைரசிற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்துக்கும் எட்டாத வகையில் மிகவும் நிதானமாக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதி வட மத்திய மாகாணத்தையும், வட மாகாணத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடு இந்த இடத்தின் ஊடாகத்தான் கீறப்பட்டிருக்கிறது. வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்துக்குரிய கச்சல்சமளங்குளம், முதலிக்குளம், ஊற்றுக்குளம், கொக்கச்சாங்குளம் ஆகிய தொன்மைக் கிராமங்கள் இந்த எல்லைக்கோட்டின் அருகே இருக்கின்றன. கடந்தகாலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகள், எல்லைக்கிராமங்களில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக இங்கிருந்த தமிழர்கள் முற்றாக இடம்பெயர்ந்து வேறிடங்களுக்குச் சென்றுவிடவே, தற்போது இக்கிராமங்கள் அடர்வனமாக மாறிவிட்டன.

இக்குடியேற்றம் இன்று நேற்று திடீரெனத் தோன்றியவையல்ல. 1983, 1984 ஆம் ஆண்டுகளில் பதவி என்கிற சோழ இராச்சியத்தின் நிர்வாக மையத்தை, பதவியா என சிங்களத்திற்குப் பெயர்மாற்றி குடியேற்றங்கள் நடத்தப்பட்டன. அதன் நீட்சிதான் வவுனியா வடக்கு பகுதியின் எல்லைக்குள் நுழைந்திருக்கிறது.

IMG 20201107 093718 சிங்கள பௌத்த மயமாகும் வவுனியா வடக்கு-அன்று கச்சல் சமணங்குளம் இன்று சபுமல்கஸ்கட..!

தற்போதைக்கு வவுனியா நகரிலிருந்து பார்த்தால், 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து சிங்கள குடியேற்றங்கள் வவுனியா நகரை அண்மித்த பகுதியில் ஏற்படத்தொடங்கியிருக்கின்றன. மடுகந்தை பெரியளவிலான குடியேற்றத்தை முதலில் கண்டது. அது அப்படியே பரவலடைந்து, எட்டம்பகஸ்வெவ, ஈரப்பொத்தானை, மாமடு என விரிவடைந்திருக்கிறது. 2009இற்குப் பின்னர் விரைவான குடியேற்றங்களும் புதிய காடழிப்புக்களும் இப்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

அது வளர்ச்சியடைந்து, வட மத்திய மாகாணத்தின் எல்லைக்குள் நுழைந்து அம்மாகணத்தின் குறுக்காகப் பரவியிருக்கிறது. அந்தப் பரவல், குறித்த மாகணத்தின் ஒரு பகுதியை முழுவதுமாக நிரவி, 2014ஆம் ஆண்டளவில் வடமாகாணத்தின் இறுதி எல்லையான வவுனியா வடக்கிற்குள் நுழைந்து விட்டது. 2019 இன் நடுப்பகுதி வரையில் வவுனியா வடக்கின் வெடிவைத்தகல்லு வரைக்கும் பரவியிருக்கிறது. அதாவது வவுனியா நகரம், அநுராதபுரத்தின் வடமுனை வவுனியா வடக்கின் தென்பகுதி வரைக்கும் குறுக்காக நன்கு திட்டமிட்ட வகையில் புதியதொரு சிங்கள குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எவ்விடத்திலும் மாற்றினத்தவரின் குடியேற்றங்கள் குறுக்காக வந்துவிடாத வகையில் மாகாண, மாவட்ட, பிரதேச நிர்வாக எல்லைகளையெல்லாம் கவனத்தில் எடுக்காது, தொடர்ச்சியான குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

IMG 20201107 093843 1 சிங்கள பௌத்த மயமாகும் வவுனியா வடக்கு-அன்று கச்சல் சமணங்குளம் இன்று சபுமல்கஸ்கட..!

கலாபோகஸ்வெவ எனப் பெயர்மாறிய கச்சல்சமளங்குளம்

இவ்வாறு வவுனியா வடக்கிற்குள் நுழைந்துவிட்ட சிங்கள குடியேற்றத்தின் பெயர் கலாபோகஸ்வெவ. அதாவது கச்சல் சமளங்குளத்திற்கு இடப்பட்டிருக்கும் சிங்களப் பெயர் கலாபோகஸ்வெவ. வவுனியா வடக்கின் வெடிவைத்தகல்லு கிராம செயலாளர் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதிக்குள் கிட்டத்தட்ட 400 வரையிலான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள் என அங்கு கடந்த வருடம் தெரிவிக்கப்பட்டது. அங்கு உண்மையில் எவ்வளவு சிங்கள குடும்பங்கள் உள்ளன என்பதை அறிவதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர். கட்டுரையாளர் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பபப்படிவத்திற்கு இன்னமும் உரிய பதில் வழங்கப்படவில்லை. அண்மையில் அரசினால் வவுனியா வடக்கு பகுதியில் வாழும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுக்கான சான்றிதழ்களைப் பெற வந்தவர்களில்  தமிழர்களைவிட சிங்களவர்களே அதிகம்.

IMG 20201107 093801 சிங்கள பௌத்த மயமாகும் வவுனியா வடக்கு-அன்று கச்சல் சமணங்குளம் இன்று சபுமல்கஸ்கட..!

இந்தக் குடியேற்றங்கள் இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. காடுகளுக்குள் புதிய வீதிகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே மண்ணாலான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய கட்டடங்களை அமைப்பதற்கான மணல், தளபாடங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. புத்தர் சிலைகளும், கொடிகளும் காடுகளுக்குள் கட்டப்பட்டுள்ளன. கீழ்க் காடுகள் அழிக்கப்பட்டு, சிறுகுடில்களும் அமைக்கப்படுகின்றன.

சபுமல்கஸ்கட சைத்திய

கச்சல்சமளங்குளத்தின் அண்மைப் பகுதியான கொக்கச்சாங்களும் – ஊற்றுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த சைத்தியத்தின் பெயர்தான் சபுமல்கஸ்கட சைத்திய. புராதன தொல்லியல் சிதைவுகள் காணப்படும் இவ்விடத்தை 2013 ஆம் ஆண்டிலிருந்து இராணுவம் பாதுகாத்து வந்தது. தற்போது பௌத்த சிதைவுகளைப் பாதுகாக்கும் சில அமைப்புக்களும், பிக்குமாரும் பொறுப்பெடுத்து புதிய விகாரைகளையும் கட்டடங்களையும் அமைத்து வருகின்றனர். பௌத்த மதப் பிக்குகளும் இங்கு தங்கியிருக்கின்றனர்.

IMG20201106112555 சிங்கள பௌத்த மயமாகும் வவுனியா வடக்கு-அன்று கச்சல் சமணங்குளம் இன்று சபுமல்கஸ்கட..!

நீரற்ற மகாவலி நதியைக் கொண்டு நடத்தப்படும் குடியேற்றவாத அரசியலின் இன்னொரு கட்டம்தான் இது. தமிழர்களின் நிலத்தொடர்ச்சியை முற்றாக சிதைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட மகாவலி எல் வலையத்திற்குள்தான் இந்தப் பகுதிகள் வருகின்றன. இது இப்படியே பரவலடைந்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்களுடன் விரைவில் இணையும். அவ்வாறு இணையும்போது, வவுனியாவிலிருந்து கொக்கிளாய் முகத்துவாரம் வரையில் குறுக்காகப் பெரியதொரு சிங்கள குடியேற்றம் அமையும். அது தனியான நிர்வாக அலகாகவும், தேர்தல் காலங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் தந்திரமாகவும் மாறும். இந்தப் பகுதிகளில் தனியான நிர்வாக அலகுகள் உருவாக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-ஆர்வலன்-