வடக்கில் கடலட்டைப் பண்ணைகள் அமைப்பது இயற்கை வளத்தைப் பாதிக்கும் -தேசிய மீனவர் இயக்கம்

விஞ்ஞான ஆய்வின் படி வடபகுதியில் கடல் அட்டைப் பண்ணைகள் அமைப்பது இயற்கை வளத்தைப் பாதிக்கும் என தேசிய மீனவர் இயக்கத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார்.

கடலட்டைப் பண்ணையால் பாதிக்கப்படுகிற வட மாகாண மீனவ பிரதிநிதிகளை உள்ளடக்கி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. அந்தக் கலந்துரையாடலில் கடலட்டைப் பண்ணை மீனவர்களுக்கு சாதகமானதாக இருக்கிறதா பாதகமாக இருக்கின்றதா என அட்டைப் பண்ணை தொடர்பில் ஆராய்ந்திருந்தோம்.

ஒட்டுமொத்த விஞ்ஞானபூர்வமான கருத்தின்படி இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பாக வடபகுதியில் அட்டைப்பண்ணையை உருவாக்குவது ஒரு முறையற்ற விடயமாக அது மீனவர்களுடைய எதிர்கால வாழ்வை பாதிக்கின்ற ஒரு விடயமாக இன்று கலந்துரையாடப்பட்டது.

ஆகவே இந்த கலந்துரையாடலில் இறுதியிலே எடுக்கப்பட்ட முடிவானது வடபகுதியிலே மேற்கொள்ளப்படுகின்ற அட்டைப்பண்ணைகள் பாரம்பரிய மீன்பிடி முறைக்கு எதிரானதாகவும் இயற்கை வளங்களை அளிக்கின்றதாகவும் மீன்கள் புலம்பெயரும் இடங்களை தடுக்கின்ற, மீன்கள் முட்டையிடுகின்ற குஞ்சு பொரிக்கின்ற இடங்கள் மறுக்கப்படுகின்றதாக காணப்படுகிறது.

தொடர்ச்சியாக இலங்கையில் வடபகுதியில் 17 விதமான அட்டைகள் காணப் படுகின்றன. அந்த அட்டைகள் அழிக்கப்படுவதற்கு இந்த அட்டைப் பண்ணைகள் ஒரு காரணமாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது.

ஆகவே அமைச்சர் அவர்களும் ஏனைய நக்ரா, நாறா நிறுவனங்கள் கடற்றொழில் பரிசோதர்கள் இது தொடர்பில் ஆழமான ஆய்வு செய்து உடனடியாக இந்த அட்டைப்பண்ணைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்
முக்கியமாக சீனாவின் அட்டை குஞ்சுகளை கொண்டு வந்து தான் இந்த அட்டைப் பண்ணைகளிலே அட்டைகள் வளர்க்கப்படுகின்றன இது கலப்பு முறையான ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது. இந்த விடயமானது சாதாரணமாக வடபகுதியில் இருக்கின்ற இயற்கையாக உருவாகின்ற அட்டைகளின் அழிவுக்கு இது காரணமாக இருக்கின்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்ற அமைப்பின்கருத்துபடி ஓர் ஆழமான ஆய்வைச் செய்து இந்த அட்டைப் பண்ணைகளை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு தற்பொழுது அட்டைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தொழில்கள், மீனவர்களின் தொழில் இடங்கள் மறுக்கப்படுகின்றன. அத்தோடு மீன் களின் உற்பத்தியும் தடுக்கப்படுகின்றது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.