கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசினால் சுமார் 2.37 பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரச நிதியுதவியுடன் வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் இன்று முறையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்திய அரசின் உதவியுடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு மொத்தம் ஒன்பது மில்லியன் ரூபா புலமைப் பரிசில் நிதி காசோலையாக வழங்கப்பட்டன.
இவை இம்மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கினார்.
அவருடன் அவரது மனைவி, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக உத்தியோகத்தர்கள், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இதன்போது இந்திய தூதுவர் கௌரவிக்கப்பட்டார்.



