திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் அனுசரணையுடன் நடைபெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பெற்றோல், எரியாயு, மின்கட்டணம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு விலை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு சிலர் சில மணிநேரம் அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,
அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்துவரும் விலைவாசியினால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக வறிய மக்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து இதற்கு தீர்வை பெற்றுத் தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பூறல், சீனன்வெளி, நல்லூர் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு, கடற்கரைச்சேனை உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எரிபொருள் விலை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் போதியளவான பொதுப்போக்குவரத்து வசிதி இல்லாமையினால் மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.



