இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (21) காலை 9 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கே உள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் தற்போது குறைந்த அழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது.
இது தொடர்ந்தும் வலுவடைந்து இலங்கைக்கு அருகில் வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் அதன் தாக்கம் காரணமாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வட மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் 150 மி.மீ.க்கு அதிகமான பலத்த மழை பெய்யும்.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்கால அறிவிப்புகளில் கவனம் செலுத்துமாறும் அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.