இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான ஊழல் வழக்கு நாளை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஒகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதியை ஒகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதுடன், உடல்நலக் குறைவு காரணமாக பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்த விசாரணையின்போது, அவர் மருத்துவமனையிலிருந்து Zoom ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதன்போது தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. இந்த நிலையில் குறித்த வழக்கு நாளைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதுடன் இதன்போது ரணில் விக்ரமசிங்க மன்றில் முன்னிலையாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.



