இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ரணில் தயார் – அஜித் மான்னப்பெரும

ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம் செல்லும் போக்கு நாட்டுக்கு பொருத்தம் இல்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதனால் மீண்டும் நாட்டுக்காக அவரின் கடமையை செய்ய வேண்டிவரும் என்பதை அவர் விளங்கிக்கொண்டு, நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தையும் தயாரித்துள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரு தெரிவித்தார்.

கம்பஹாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க எப்போதும் இளைஞர்கள் தொடர்பில் எதிர்ப்பார்ப்புடன் இருப்பவர். அவர்தான் ஆசியாவில் முதலாவதாக இளைஞர் அமைப்பை ஏற்படுத்தினார். இளைஞர் விவகார அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். ஆனால் இன்று இளைஞர்களுக்கு நாடு தொடர்பில் எதிர்ப்பார்ப்பு இல்லை. அதனால் படித்த இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். இதன்காரணமாக வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் பணியாற்ற சட்டத்தரணிகள் இல்லை. மின்சார சபையில் பொறியியலாளர்கள் இல்லை.

ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விலகி இருப்பதற்கே தீர்மானித்திருந்தார். நானும் அவ்வாறான தீர்மானத்திலே இருந்தேன். ஆனால் இந்த அரசாங்கம் நாட்டு மக்களை அடக்கிக்கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து, முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கையை பார்க்கும்போது, அரசியல் தொடர்பில் தெரிந்தவர் என்ற அடிப்படையில், இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகிச்செல்ல மனம் இடமளிப்பதில்லை. அதேபோன்றே இந்த அரசாங்கம் நாட்டை முன்னெடுத்துச்செல்லும் போக்கை பார்க்கும்போது, ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் நாட்டை பொறுப்பேற்பதற்காக அரசியலில் தொடர்ந்து இருக்கவேண்டி ஏற்பட்டிருக்கிறது.

ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம் செல்லும் போக்கு நாட்டுக்கு பொருத்தம் இல்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதனால் மீண்டும் நாட்டுக்காக அவரின் கடமையை செய்ய வேண்டிவரும் என்பதை விளங்கிக்கொண்டுள்ளார். 2029 ஆகும்போது நாடு எந்த நிலையில் இருக்கும் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்வதற்கு முன்னர் அவர் விளங்கிக்கொண்டுள்ளார். அதனால் அவர் நாட்டை மீண்டும் பொறுப்பேற்றால், நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என்ற திட்டத்தையும் அவர் தயாரித்து முடித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சரியாக செயற்படாவிட்டாலும் பாராளுமன்றத்துக்கு வெளியில், கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகிறது என்றார்.