வெனிசுவேலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) தெரிவித்தார்.
இதன்காரணமாக, உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உலகளாவிய ரீதியில் நிலவும் இந்தப் பதற்ற நிலைமையால் உள்நாட்டு எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய துல்லியமான தாக்கத்தை அரசாங்கத்தினால் தற்போதைய நிலையில் கணிக்க முடியாதுள்ளது.
சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்கனவே ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதை அரசாங்கம் கவனித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உலகச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நிதி அமைச்சு மற்றும் ஏனைய துறைசார் அமைச்சுகள் கலந்துரையாடி தகுந்த தீர்மானங்களை எடுக்கும்.
எரிபொருள் விலைத் திருத்தம் குறித்த இறுதி முடிவுகள் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னிலை சோஷலிச கட்சியினரால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.



