தீபாவளி முற்பணம் ரூபா 15,000 தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அப்பணம் தரப்படவில்லை எனத் தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக நேற்று அறிவித்ததை அடுத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
தாம் முறையாக வேலை செய்ததாகவும், தற்போது தமக்கு வழங்கப்படும் முற்பணம் மாத சம்பளத்தில் அறவிடப்படும். பெருந்தோட்ட கம்பனி தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியிருந்த போதிலும் இதனை தோட்ட நிர்வாகம் வழங்க முடியாது என கூறுவது எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்.
இதனாலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
விலைவாசி அதிகரிப்பு, பொருளாதார பிரச்சனைகள் இருக்கும் போது எவ்வாறு தீபாவளியை கொண்டாட முடியும். எனவே தோட்ட நிர்வாகம் உடனடியாக தீபாவளி முற்பணத்தை முறையாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தாம் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போம் என தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எச்சரித்துள்ளனர்.