ஜனாதிபதியின் உரை, நாடு நீதியான பாதையில் செல்வதற்குத் தயாரில்லை என்பதையே காட்டுகின்றது- சிறிதரன்

ஜனாதிபதியின் உரை

ஜனாதிபதியின் உரை: இராணுவ சிந்தனையிலும், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளிலும் மட்டும்தான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் சிந்தனை இருப்ப தாகவே அவரின் பேச்சு அமைந்துள்ளது. ஆகவே இந்த நாடு நியாயமான அல்லது நீதியான பாதையில் செல்வதற்குத் தயாரில்லை என்பதைத்தான் ஜனாதிபதியினுடைய உரை குறிப்பிட்டுள்ளது என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்  மேலும் பேசுகையில்,

2019-11-18 ஆம் திகதி ஜனாதிபதி அனுராதபுரத்திலே முதல் முதலாக தனது பதவியை ஏற்றிருந்தார். 2019-11-30 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவுக்குச் சென்ற போது இந்து பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்திருந்தார். 2020-08-20 ஆம் திகதி 9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து கொள்கைப் பிரகடன உரை ஆற்றினார். 2022 -01-18 ஆம் திகதி 9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து கொள்கைப் பிரகடன உரையாற்றினார். இவை தொடர்பில் நாம் உன்னிப்பாக அவதானித்தோம்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ,இந்த நாட்டிலே வாழ்கின்ற பல்லின மக்கள் குறிப்பாக தமிழர்கள் என்ற ஒரு தேசிய இனத்தினுடைய அடிப்படைகளைத் தூக்கி கடாசிவிட்டு தன்னுடைய மனதில் கூட அதனைச் சொல்ல முடியாத ஒரு தலைவராக இருக்கின்றார். இந்த நாட்டினுடைய ஜனாதிபதியின் உரை என்பது சகல இன மக்களையும் அணைத்துச் செல்கின்ற ,அந்த மக்களை ஒன்றிணைத்துச் செல்கின்ற,இந்த இலங்கை என்ற நாட்டை கட்டி எழுப்புகின்ற ஒரு மனிதருடைய,ஒரு தலைவருடைய உரையாக அது அமையவில்லை.

மீண்டும் தன்னுடைய இராணுவ சிந்தனை வாதத்துக்குள் ,தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளில் மட்டும்தான் அவருடைய சிந்தனை இருப்பதாகவே ஜனாதிபதியின் பேச்சு அமைந்துள்ளது. ஆகவே இந்த நாடு இன்னுமொரு நியாயமான அல்லது நீதியான பாதையில் செல்வதற்குத் தயாரில்லை என்பதைத்தான் ஜனாதிபதியின் உரை குறிப்பிட்டுள்ளது.

இந்த நாடு ஒரு சீரான பாதையில் நேர்த்தியாகச் செல்ல வேண்டுமென்றால் இந்த நாட்டினுடைய மிக முக்கியமான இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் முதலில் ஜனாதிபதி தன்னுடைய மனதை மாற்ற வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டினுடைய இறைமையும் இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையும் பொருளாதாரமும் கட்டியெழுப்பப்படும். ஏனைய இனங்களும் மதிக்கப்படும். அவர்களுடைய சுதந்திரமும் பேணப்படும்.

இங்கு எமக்கு பேச நேரம் தருகிறார்கள் இல்லை. எமது கருத்துகளைக் கூற முடியாதுள்ளது.அவ்வாறான ஒரு கொடூரமான அரசுக்குள்தான் நாம் இருக்கின்றோமா என்ற எண்ணம் எமக்குத் தோன்றுகின்றது” என்றார்.