மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

கயூமின் பயணத்தில் பொருளாதார அபிவிருத்திக்கான முன்னாள் அமைச்சர் ஃபாரிஸ் மௌமூனும் உடன் இணைந்துள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கயூம் சந்தித்தார். அங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேசினர்.

நீண்ட கால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் கலந்துரையாடியிருந்தனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மாலைதீவுடன் இலங்கை பேணி வந்த வலுவான மற்றும் நெருக்கமான பிணைப்புக்காக இலங்கை அரசாங்கத்திற்கு கயூம் நன்றி தெரிவித்தார்.

இதன்போது, 2021 இல் தொடங்கிய பொருளாதார நெருக்கடியின்போது தொடர்ந்து அளித்ததற்கு ஆதரவுக்கு மாலைதீவு அரசாங்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூமுக்கு 2008 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா மித்ர விபூஷண விருது வழங்கப்பட்டது. இது பிரஜைகள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் இலங்கையின் மிக உயரிய கௌரவமாகும்.