முல்லைத்தீவில் வாக்களிப்பதை படம்பிடித்து வெளியிட்டவர் மீது சட்டநடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தபால் மூலம் வாக்கு போடுவதை ஒளிப்படம் எடுத்து அதனை வேறு ஒரு நபர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் க.காந்தீபன் தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்றைய தினம் (16) நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான தபால்மூல வாக்கு பதிவினை படம் எடுத்து வேறு ஒரு நபர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக குறித்த ஒளிப்படத்தினை பதிவேற்றியவர் காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலின் போது வாக்காளர்கள் எக்காரணம் கொண்டும் ஒளிப்படம் எடுப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்துடன் இது தேர்தல் விதிமுறையினை அப்பட்டமாக மீறும் செயற்பாடு என்றும் வாக்காளர்களின் வாக்களிப்பின் இரகசிய தன்மை பேணப்படவேண்டும். இதனை வெளிப்படுத்துவது வாக்களிப்பின் நோக்கத்தினை இல்லாமல் செய்யும் நோக்கமாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.