“நீதியின் ஓலம்” போராட்டத்துக்கு அனுமதி: வலி. கிழக்கு தவிசாளரிடம் விசாரணை…

யாழ். செம்மணி பகுதியில் இடம்பெறும் “நீதியின் ஓலம் – 2” போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு வழிவகுக்கும் விடயமாக உள்ளதாகக் குறிப்பிட்டு, அவ்வாறான ஒரு போராட்டத்துக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று சனிக்கிழமை (15) வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் எவ்வகையில் போராட்டத்திற்கு அனுமதியளிக்க முடியும் என்ற விளக்கம் கேட்டு யாழ்ப்பாண  காவல்துறை தலைமையகத்தில் அவரது அலுவலகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தவிசாளரிடம் கேட்டபோது அவர் கூறுகையில்,

யாழ்ப்பாண தலைமைப் பிரதான  காவல்துறைப் பொறுப்பதிகாரியின் கடிதத்துடன் எனது அலுவலகத்துக்கு வருகை தந்த பொலிஸார் என்னை பதிலளிக்குமாறு கோரும்  கடிதத்தினை கையளித்தனர்.

அக்கடிதத்தில், செம்மணியில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராடுவதுடன் பேரணியாக யாழில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் மனு கையளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போராட்டத்திற்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகிய நீங்கள் அனுமதி வழங்கியுள்ளமை பொலிஸ் தரப்புக்குத் தெரிய வந்துள்ளதாகவும் இவ்வாறான போராட்டத் தொடர் நடத்தப்படுவதன் மூலம் இலங்கையின் வெவ்வேறு இனத்தவர்களுக்கிடையே ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என பொலிஸ் கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடிதத்தில், பொலிஸ் தரப்பின் அனுமதியின்றி இவ்வாறான போராட்டத் தொடரை நடத்துவதற்கு உங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளதுடன் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பின், அதற்கான சட்டபூர்வமான அடிப்படை என்ன? இவ்வாறானதொரு போராட்டத் தொடரை எம்மால் எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
அத்துடன் அவர், இந்நிலையில் ஜனநாயக ரீதியிலான, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீதி கோரிய போராட்டத்தினை எமது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நடத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக ரீதியான மனித உரிமைகளை வலியுறுத்திய மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு தான் அனுமதியளித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்   பொலிஸ் தரப்பிற்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.