விசாரணைநடவடிக்கைகள் வருத்தமளிக்கின்றது- P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம் 

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து காவல்துறையினர் விசாரணை செய்யும் நடவடிக்கைகள் வருத்தமளிப்பதாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம்  தெரிவித்துள்ளது .

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சிவயோகநாதம் தெரிவிக்கையில்,

“பொத்திவில் தொடங்கி பொலிகண்டிவரை ஜனநாயக எழுச்சி போராட்டம் ஒன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களை பொலிஸார் பல்வேறு காரணங்களை கூறி விசரைணைக்கு அழைக்கிறார்கள் அதனால் பல அசௌகரியங்களுக்கு மக்கள் உள்ளாகிறார்கள் . இன்றைய தினம் எனது வீட்டுக்கும் சென்று விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளார்கள்.

பொதுமக்கள்,மதகுருக்கள், கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் பல்வேறு குற்றங்களை சுமத்தி விசாரணைக்கு அழைக்கிறார்கள். இச்செயற்பாடுகள் இந்த நாட்டில்  ஜனநாயக இடைவெளியை மேலும் அதிகமாக்கும் .

இந்த பேரணி வன்முறைகள் எதுவும் இன்றி மிக ஒழுக்கமாக ஜனநாயக ரீதியில் இடம்பெற்றது . எனவே நாட்டின் பிரஜைகளாக நாமும் சுதந்திரமாக வாழ இந்த நாட்டில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் வழிசெய்ய வேண்டும்” என்றார்.