பாகிஸ்தானில் வௌ்ளம்- 326 குழந்தைகள் உட்பட 900க்கும் மேற்பட்டோர் பலி

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு சம்பங்களில் 1,293 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தானில் மாகாணங்களில் பதிவாகியுள்ளன.

ஒரு கோடி மக்கள் வீடுகளை இழந்து, இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மண் வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளப் பகுதிகளில் சிக்கி உதவிக்காக காத்திருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பிரிவினைக்கான நேரம் அல்ல, ஒற்றுமைக்கான நேரம். நாம் சமாளிக்க வேண்டும், மனிதாபிமான நெருக்கடியை ஒரே தேசமாக ஒன்றுபட்டு நின்று வெல்வோம் என்றும் ஷெர்ரி ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.