வடக்கில் அத்துமீறும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முனையவில்லை – கடற்படை

வடக்கில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த  முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்  இடம்பெற்ற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது கடற்படை அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஒரு சில படகுகளில்  இந்திய மீனவர்கள் வந்தால் அதனை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதிகளவில் வருவதனால் எம்மால்  கட்டுப்படுத்த முடியவில்லை. அதனை கட்டுப்படுத்துவதற்குரிய பூரணமான வளங்கள் எங்களிடம் இல்லை. குறிப்பாக ஆளணி உபகரணங்கள் எங்களிடம் இல்லை. எனவே அதனை ஒரு ராஜதந்திர முறையில் கட்டுப்படுத்துவதுதான் சிறந்தது.

நமது கடற்பிரதேசமானமானது பெரிய பிரதேசம் அந்த பிரதேசம் முழுவதிலும் கடற்படை செயற்படுகின்றது. எனினும் எம்மால் முயன்றவரை நாங்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துகின்றோம்.

குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் 12ஆயிரம் கிலோ கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளோம். அதேபோல் போதைப் பொருள் விநியோகம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம்.

இந்திய மீனவர்களை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த நாங்கள் இன்று வரை முயற்சிக்கவில்லை. மனிதாபிமானமாக செயற்படுகின்றோம். அதாவது மீன்பிடி தொழிலாளர்களாகவே  பார்க்கின்றோம். எனவே கடற்படை தேசிய பாதுகாப்பினை செயல்படுத்தவில்லை என நீங்கள் கருத வேண்டாம் என்றார்.