மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா: வட கொரியா – ஜப்பானின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் ஏவுகணையை வட கொரியா செலுத்தி சோதனை செய்துள்ளதாக தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்துள்ளன.
வட கொரியாவின் சின்போ துறைமுகத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை, ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் பகுதியில் விழுந்ததாக தென் கொரியாவின் ஒருங்கிணைந்த முதன்மை இராணுவ தளபதி தெரிவித்தார்.
இந்தச் சோதனை குறித்து தென் கொரிய கூட்டுப்படைகள் தலைவர் கூறுகையில், “வட கொரியாவிடம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவும் வசதி இருக்கிறது. வட கொரியா அதனைப் பயன்படுத்தி தற்போது ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. நாங்கள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை கூர்ந்து கவனித்துள்ளோம் ”என்றார்.
தென் கொரியா, ஜப்பான், அமெரிக்க உளவுத் துறை தலைவர்கள், தென் கொரிய தலைநகரான சியோலில் இந்த வாரம் சந்திக்க உள்ளனர். இரண்டு பெலாஸ்டிக் ஏவுகணைகள் வந்ததாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. சில ஏவுகணை பரிசோதனைகள் கடுமையான சர்வதேச தடைகளை மீறுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
மேலும் பெலாஸ்டிக் மற்றும் அணு ஆயுத ஏவுகணைகளை வடகொரியா பரிசோதிக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் தடைவிதித்திருப்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.