இலங்கை-பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இல்லை-ரெலோ

பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் வரும்

புதியவர்கள் வந்து இந்த அரசாங்கத்தை நடத்தும் நிலைமை காணப்பட்டாலும் பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான (ரெலோ) செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அவர்  கருத்து தெரிவிக்கையில்,

”புதிய அமைச்சரவை என்பது பழைய தலைகள் மாற்றப்பட்டு புதிய தலைகள் வரவேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். அதே கட்சியைச் சார்ந்தவர்களையே நியமிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.

ஆட்சி மாற்றம் என்பது பிரதமர் மாற வேண்டும், ஜனாதிபதி மாற வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை.

அதாவது பிரதமராவது மாறுகின்ற ஒரு நிலைகாணப்பட வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் புதிய தலைகள் தான் வரப்போகிறார்களே தவிர, நான் நினைக்கின்றேன் சஜித் பிரேமதாசாவின் கட்சி அதனை மறுத்துவிட்டது.

ஜேவிபியும் மறுத்து விடும் என நினைக்கின்றேன். விமல்வீரவன்ச, கம்மன்பில இந்த அமைச்சரவைக்குள் போகக்கூடிய வாய்ப்புக்கள் கூட இருக்கின்றது.

அந்தவகையில் புதியவர்கள் வந்து இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடாத்தும் நிலைமை தான் காணப்படுகின்றது. ஆனாலும் பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை” என்றார்.

Tamil News