தீர்வின்றித் தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்!

திருகோணமலை – முத்துநகர் விவசாயிகளின் விவசாய நில அபகரிப்புக்கு எதிரான தொடர் சத்தியாக் கிரக போராட்டம் இன்றுடன் 31ஆவது நாளை எட்டியுள்ளது. குறித்த போராட்டம் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான நிலையில் பிரதமர் ஹரினி அமர சூரிய வழங்கிய இரண்டாம் கட்ட வாக்குறுக்கு இன்னும் இரண்டு  நாட்களே எஞ்சியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் காணி என கூறி 352 விவசாய குடும்பங்களை வெளியேற்றி சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு  வழங்க தமது காணிகளை அபகரித்துள்ளதாக   தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் இரு விவசாய நீர்ப்பாசன குளங்களை மூடி சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்துக்கு வழங்கியதால் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சாதகமான தீர்வை பெற்றுத்தராத பட்சத்தில் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.
குறித்த போராட்டக்காரர்களுடன் மக்கள் போராட்ட முண்ணனி, அகில இலங்கை விவசாய சம்மேளனம் போன்றனவும் ஆதரவு வழங்கி வருகிறது.